காங்கிரஸ் கொடி பறக்குது; தாமரையும் மலர்ந்தது

கொச்சி, திருச்சூர், கொல்லம் ஆகிய 3 மாநகராட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து காங்கிரஸ் தட்டிப்பறித்து விட்டது.
தமிழ்நாட்டோடு சேர்ந்து கேரளாவிலும் அடுத்த 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2 முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை மீண்டும் ஆட்சிக்கட்டிலை பிடிக்குமா? அல்லது காங்கிரஸ் கைப்பற்றிவிடுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் பலமாக இருக்கிறது. கேரளாவும், மேற்குவங்காளமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில், மேற்குவங்காளத்தில் மம்தாபானர்ஜி அந்த கோட்டையை தகர்த்து தனது கொடியை பட்டொளிவீசி பறக்கவிட்டார். தமிழ்நாட்டோடு சேர்த்து கேரளா மட்டுமல்லாது, மேற்குவங்காளமும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.
கேரளாவை பொறுத்தமட்டில், கம்யூனிஸ்டு கட்சிதான் முதலில் ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரியாக நம்பூதிரிபாட் இருந்தார். நாட்டின் பிரதமராக இருந்த நேரு, அவரை கவிழ்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் நடக்கவில்லை. ஏனெனில், அவரது அரசாங்கம் நேர்மையாக இருந்தது. அவரும், மந்திரிகளும் சைக்கிள்களைதான் பயன்படுத்தினார்களேதவிர, காரை பயன்படுத்தவில்லை. பங்களாக்களை தவிர்த்து சாதாரண வீடுகளில் வாழ்ந்தனர். நம்பூதிரிபாட்டுக்கு பிறகு, கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனியாக செயல்பட்டநிலையில், 1987, 1996, 2006, 2016, 2021-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டே ஆட்சியை பிடித்தது.
இந்தநிலையில் கேரளாவில் 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 941 கிராம பஞ்சாயத்துகள், 152 பஞ்சாயத்து யூனியன்கள், 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் கடந்த 9, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நிர்வாக காரணங்களால் மட்டனூர் நகரசபைக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. இது வரஇருக்கும் சட்டசபை தேர்தலுக்கு அரையிறுதி ஆட்டமாக அதாவது, செமி பைனலாக கருதப்பட்டது. சட்டசபை தேர்தலின் முன்னோட்டமும் இதுதான் என்ற வகையில், அனைத்து மட்டங்களிலும் இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மிகப்பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு பெரும்சரிவை கொடுத்தது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய மாநகராட்சிகள் காங்கிரசின் வசம் சென்றுவிட்டன. இதில் கொச்சி, திருச்சூர், கொல்லம் ஆகிய 3 மாநகராட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து காங்கிரஸ் தட்டிப்பறித்து விட்டது. கண்ணூர் ஏற்கனவே காங்கிரசிடம் இருந்த நிலையில், இப்போது மீண்டும் அவர்களே வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே வெற்றிபெற்றிருந்த நிலைமாறி, இந்த தேர்தலில் அதை பா.ஜனதா கைப்பற்றி தாமரையை அங்கு மலர வைத்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. மார்க்சிஸ்ட் வசம் கோழிக்கோடு மாநகராட்சி மட்டுமே உள்ளது. மேலும் மற்ற உள்ளாட்சி அமைப்பு அனைத்திலுமே காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் பக்கம்தான் கேரளா இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டது.
குறிப்பாக பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் வெற்றி மிகவும் அபாரமாக இருந்தது. பா.ஜனதாவும் குறிப்பிடத்தக்க அளவில் தனது வெற்றியை பதிவுசெய்து எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கையை இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் கொடுத்துள்ளது. கேரளாவில் அரசியல் விழிப்புணர்வு உண்டு என்ற வகையில், சட்டசபை தேர்தலில் இதே உணர்வுகள் வெளிப்படுமா? அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனது பலத்தை காட்டுவதற்கு எடுக்கப்போகும் முயற்சி வெற்றிபெறுமா? என்ற கேள்விகளுக்கு இன்னும் 4 மாதங்களில் பதில் தெரிந்துவிடும்.



