சினிமா கேள்வி- பதில்: குருவியார்


சினிமா கேள்வி- பதில்: குருவியார்
x
தினத்தந்தி 28 May 2017 7:14 AM GMT (Updated: 28 May 2017 7:14 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

நடிகர் சிவகுமார் 20 வயது இளைஞரைப்போல் இன்னும் இளமையான தோற்றத்துடன் இருப்பதன் ரகசியம் என்ன? (எஸ்.செந்தூர்பாண்டியன், மதுரை)

முறையான உடற்பயிற்சியும், கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களும்தான் அந்த ரகசியம்!

***

குருவியாரே, வருடந்தோறும் கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் திரிஷா இந்த வருடம் எந்த நாட்டுக்கு சென்றார்? (எஸ்.கோதண்டராமன், ஸ்ரீரங்கம்)

திரிஷா இந்த வருட கோடை விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடினாராம்!

***

குருவியாரே, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கி முடித்துள்ள செல்வராகவன் அடுத்து யாரை வைத்து படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார்? (எஸ்.ராம்சிங், திருச்சி)

செல்வராகவன் அடுத்து சந்தானத்தை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது!

***

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படம் எப்போது திரைக்கு வரும்? (எஸ்.அர்‌ஷத் பயாஸ், குடியாத்தம்)

‘வேலைக்காரன்’ படம் செப்டம்பர் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது!

***

குருவியாரே, விஜய்யும், சிம்புவும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருப்பது உண்மையா? (பி.விஜய்ராம், சென்னை)

அப்படி ஒரு படம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த தகவல் வெறும் வதந்தியே!

***

தமன்னா தன்னம்பிக்கை மிகுந்தவரா அல்லது உறுதியான மனப்பக்குவம் இல்லாதவரா? (ஆர்.ராஜா, வேலூர்)

தன்னம்பிக்கை மிகுந்தவர் என்பதால்தான் கடந்த 10 வருடங்களாக தமன்னா திரையுலகில் நீடித்து நிலைத்து நிற்கிறார்!

***

குருவியாரே, பாகுபலி, பாகுபலி-2 ஆகிய 2 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், பாகுபலி-3 படம் வெளிவர வாய்ப்பு இருக்கிறதா? (எஸ்.ஹரிகிருஷ்ணன், கோணலூர்)

‘பாகுபலி’ படத்தின் முடிவில், “பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்ற கேள்வி தொக்கி நின்றதால், ‘பாகுபலி-2’ உருவானது. அதில் கதாநாயகனால் வில்லன் கொல்லப்பட்டு விட்டதால், ‘பாகுபலி-3’ உருவாக வாய்ப்பு இல்லை!

***

‘வனமகன்’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே அந்த படத்தின் நாயகி சாயீஷாவை ஆஹா...ஓஹோ...என்று எல்லோரும் புகழ்கிறார்களே...? (எஸ்.ரவிகுமார், காஞ்சீபுரம்)

ஒரு சில கதாநாயகிகளுக்கே இந்த புகழ் கிடைக்கும். அந்த பட்டியலில் சாயீஷாவும் சேர்ந்து இருக்கிறார்!

***

குருவியாரே, ‘அப்பாவின் மீசை’ என்ற படத்தை இயக்கி வரும் ரோகிணி, தொடர்ந்து படங்களை இயக்குவாரா? (ஏ.சம்சுதீன், நெல்லை)

தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இயக்குனர் ஆகியிருக்கிறார்!

***

சாவித்ரி வாழ்க்கை வரலாறு படமாகிறதே....அதில் எத்தனை கதாநாயகிகள் நடிக்கிறார்கள்? (சி.எட்வர்ட், கோவை)

சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும், சமந்தாவும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறார்கள்!

***

குருவியாரே, இனிமேல், ‘பாகுபலி’ மாதிரி பல நூறு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான படங்கள் எடுத்தால்தான் ஓடுமா? (வி.பாலமுருகன், சேலம்)

‘காக்கா முட்டை,’ ‘விசாரணை’ போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் வெற்றிகரமாக ஓடுகின்றனவே...!

***

‘மகாபாரதம்’ கதை திரைப்படமாகிறதாமே... அது எத்தனை கோடி செலவில் உருவாகிறது? (ஆர்.குணசுந்தரி, பெங்களூரு)

‘மகாபாரதம்,’ ரூ.1,000 கோடி செலவில் திரைப்படமாகிறது!

***

குருவியாரே, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை டைரக்டு செய்த கணபதி பாலமுருகன் அடுத்து டைரக்டு செய்ய இருக்கும் ‘எல்லா பெண்களும் என்னையே பார்க்கிறார்கள்’ படத்தில் கதாநாயகன் யார்? (கே.எஸ்.முருகேசன், திருப்பூர்)

‘எல்லா பெண்களும் என்னையே பார்க்கிறார்கள்’ படத்துக்காக யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்னும் அவர் உறுதி செய்யப்படவில்லை!

***

“ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வைக்கலாமா?” என்ற பாடலை எழுதிய கவிஞர் ரவிபாரதி இதுவரை எத்தனை பாடல்களை எழுதியிருக்கிறார்? (ஏ.ஜான் ஆபிரகாம், ராசிபுரம்)

“ஆசை அதிகம் வச்சு” (மறுபடியும்), “இதயமே நாளும் காதல் பேசவா” (அடுத்தாத்து ஆல்பர்ட்), “புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்” (ராமன் அப்துல்லா) உள்பட ரவிபாரதி 50-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்!

***

குருவியாரே, ‘மாநகரம்,’ சரவணன் இருக்க பயமேன்’ ஆகிய படங்களின் நாயகி ரெஜினா கெசன்ட்ராவின் மார்க்கெட் நிலவரம் எப்படியிருக்கிறது? (கே.பாலாஜி, நாமகிரிப்பேட்டை)

ரெஜினா கெசன்ட்ராவுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவர் உயர்ந்து வருகிறார்!

***

கே.ஆர்.விஜயா அறிமுகமான படம் எது, அந்த படத்தை இயக்கியவர் யார்? (பி.ராதாகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை)

கே.ஆர்.விஜயா அறிமுகமான படம், ‘கற்பகம்.’ அந்த படத்தை இயக்கியவர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன்!

***

குருவியாரே, தமிழ் பட கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? அதிக ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் யார்? (ஆர்.குருசரண், திருச்செங்கோடு)

தமிழ் பட கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்குபவரும் நயன்தாராதான். அதிக ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவரும் அவர்தான்!

***

அனுஷ்கா, தமன்னா ஆகிய இரண்டு பேரில் முக வசீகரம் கொண்டவர் யார்? (சோ.ராம்சுந்தர், புதுச்சேரி)

அனுஷ்காவுக்கு தென்னிந்திய முகம். தமன்னாவுக்கு வட இந்திய முகம். இரண்டு பேருக்கும் இடையே ஓட்டெடுப்பு நடத்தினால், தென்னிந்திய முகத்துக்கே எங்கள் ஓட்டு என்கிறார்கள், பெரும்பான்மையான ரசிகர்கள்!

***

குருவியாரே, எமிஜாக்சன், டாப்சி ஆகிய இரண்டு பேருக்கும் நடிப்பு போட்டி வைத்தால், யார் வெற்றி பெறுவார்கள்? (சா.வசந்த் குமார், திருத்துறைப்பூண்டி)

‘என் பெயர் ஷபானா’ என்ற படத்தில் மிக சிறந்த நடிகை என்பதை டாப்சி நிரூபித்து விட்டார்!

***

தமிழ் பட உலகில் கவர்ச்சி நடன நடிகைகள் காணாமல் போனது ஏன்? (எம்.ரஞ்சித்சிங், கடலூர்)

கதாநாயகிகளே கவர்ச்சி நடனம் ஆடுவதால், கவர்ச்சி நடன நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய் விட்டது!

***

Next Story