கிளர்ச்சி விளம்பரத்தில் கவர்ச்சி ஜோடி


கிளர்ச்சி விளம்பரத்தில் கவர்ச்சி ஜோடி
x
தினத்தந்தி 25 Feb 2018 9:22 AM GMT (Updated: 25 Feb 2018 9:22 AM GMT)

இந்தி நடிகை பிபாஷா பாசு - அவரது கணவர் கரண்சிங் குரோவர் இருவரும் கிளர்ச்சியான விளம்பரம் மூலம் கவர்ச்சியான ஜோடியாகியிருக்கிறார்கள்.

ந்தி நடிகை பிபாஷா பாசு - அவரது கணவர் கரண்சிங் குரோவர் இருவரும் கிளர்ச்சியான விளம்பரம் மூலம் கவர்ச்சியான ஜோடியாகியிருக்கிறார்கள். ஆணுறை விளம்பரத்தில் தோன்றி பரபரப்பை பற்றவைத்திருக்கிறார்கள். இந்திய திரை உலக தம்பதி ஒன்று இப்படிப்பட்ட கிளர்ச்சியான காட்சியில் தோன்றி நடித்திருப்பது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. முகம் தெரியாத மாடல்களே நடிக்கத் தயங்கும் அந்த விளம்பரத்தில் இவர்கள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.

அந்த ஆணுறை விளம்பரத்தை பார்த்தவர்களில் ஒருசாரார், ‘இப்படி எல்லாம் நடித்திருக் கிறார்களே!’ என்று முகம் சுழிக்கிறார்கள். இன்னொரு தரப்பினர், ‘இது விழிப்புணர்வுக்குரிய நல்ல விஷயம்’ என்றும் சொல்கிறார்கள்.

இது பற்றி பிபாஷாவிடம் கேட்டபோது..

‘‘இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை நான் ஒரு சமூக கடமையாக கருதுகிறேன். எல்லோரும் பேச தயங்கும் விஷயத்தை நாம் பண்பாடு என்று கருதி, பேசாமலே இருந்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆணுறையை, பேசத் தயங்கும் விஷயம் என்று கூறி ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் மக்கள்தொகை எவ்வளவு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆணுறை பற்றி நாம் பேசாததால்தான் மக்கள் தொகை நம்நாட்டில் உயர்ந்துகொண்டே போகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான விழிப் புணர்வு நம்மிடம் இல்லை. மக்கள்தொகை அதிகமானதால் நாம் ஒவ்வொன்றையும் போராடித்தான் பெறவேண்டியதிருக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்களின் அடிப்படை தேவைகள்கூட நிறைவேறவில்லை. நமது நாட்டின் வறுமைக்கு முக்கிய காரணம், மக்கள்தொகை தான். வறுமையை ஒழிக்க அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் வெற்றிபெறவில்லை. திட்டமிட்ட குடும்பமுறையை கடைப்பிடித்து ஒவ்வொரு இந்தியரும் வாழ்ந்து மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால் மட்டுமே வறுமை ஒழியும்.

ஆணுறைகளை தயாரித்து ரகசியமாக விற்பனை செய்வது, இலவசமாக அளிப்பது, இதெல்லாம் பலன்தராது. இதில் வெளிப்படைத்தன்மை தேவை. மக்கள் இதன் பலன் அறிந்து வாங்கி பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஏதாவது மாற்றம் ஏற்படும்.

குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களால் நம் இந்திய கலாசாரம் எந்த விதத்திலும் பாதிக்காது. எங்களைப் போன்ற பிரபலங்கள் அதில் தோன்றும்போது அது பலரிடமும் போய்சேரும். அதனால் நல்ல மாற்றங்கள் விளையும். இதில் எந்த ஒழுக்க குறைவும் ஏற்பட்டுவிடாது. அதனால்தான் இருவரும் இணைந்து நடித்தோம். பணத்திற்காக நாங்கள் அதில் நடித்தோம் என்று, பலர் பேசிக் கொண்டார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பணத்தை சினிமாவில் நடித்தே சம்பாதித்துவிடலாம். ஆணுறையின் பயன்பாடு என்ற உண்மையை எல்லோரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே நாங்கள் நடித்தோம்’’ என்கிறார்.

60 விநாடிகள் ஓடும் அந்த ஆணுறை விளம்பரத்தில் இருவரும் கிளர்ச்சியூட்டும் விதத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். விளம்பரம் வெளியான சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான மக்கள் அதனை வலைதளத்தில் பார்த்தார்கள். இந்தி திரை உலகிலும் அது பரபரப்பை உருவாக்கியது. சாமானிய மக்களும் அதை பார்த்து ரசித்தனர்.

சல்மான்கான் இந்த விளம்பரத்தை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து அகற்றிவிட்டார். எவ்வளவு நியாயப்படுத்தினாலும் இந்த விளம்பரம் கொஞ்சம் மோசமாகத் தான் உள்ளது. இதை என் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறுவர்களும் பார்க்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பதால் என் நிகழ்ச்சிக்கு இந்த விளம்பரம் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.

பிபாஷா-கரண் தம்பதிக்கு ‘கவர்ச்சி ஜோடி’ என்ற பெயர் உண்டு. அவர்கள் தங்களுடைய தேன்நிலவு போட்டோக்களையே சமூக வலை தளத்தில் ரசிகர்்களுடன் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் அப்படி பகிர்ந்து கொண்ட படங்கள், ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் பார்வையில் விழுந்தது. சும்மாவே இப்படிப்பட்ட படங்களை பதிவிடுகிறவர்கள், நமது கிளர்ச்சி விளம்பரத்திற்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று அவர்கள் கருதினார்கள். அணுகினார்கள். வேலையை எளிதாக முடித்துவிட்டார்கள்.

இந்த ஜோடி திருமணமான புதிதில் தேன்நிலவிற்காக மாலத்தீவிற்கு சென்றிருந் தனர். அங்கே அவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி போட்டோக்களை வலைதளங்களில் பரவவிட்டனர். வெல்கம் கேக் வெட்டுவதிலிருந்து அவர்கள் ஒவ்வொரு நாளும் அணிந்துகொண்ட உடைகள், பகிர்ந்துகொண்ட உணர்ச்சிபூர்வமான காட்சிகள் போன்ற அனைத்தையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்கள்.

பிபாஷா - கரணின் நிஜ காதல் கதையும் ருசிகரமானதுதான். அவர்கள் இருவரும் ‘அலோன்’ என்ற இந்தி சினிமாவில் முதலில் ஜோடியாக நடித்தார்கள். வழக்கம்போல் நட்புடன் பழகினார்கள். பின்பு காதல் உருவானது. திருமணத்தில் நிறைவடைந்தது. இருவரும் வங்காள ஐதீக முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். பிபாஷாவிற்கு இது முதல் திருமணம். கரணுக்கு மூன்றாவது திருமணம். அவர்கள் இருவரும் திருமணம் செய்த நாளில் இருந்து இன்று வரை, தினமும் தங்கள் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இவர்கள் உணர்வுரீதியான விஷயங்களில் மட்டுமின்றி, உடல்ரீதியான விஷயங்களிலும் ஒரே சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவைகளை இருவரும் இணைந்தே செய்கிறார்கள். தினமும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இவர்கள் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை. வெளிப்புற படப்பிடிப்பிலும் உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கிவிடுகிறார்கள். யோகாவிலும் இருவரும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்கள்.

‘‘என்னைவிட கரண் அற்புதமாக யோகா செய்வார். எனக்கு தெரியாத யோகாசனங்களை கரண் கற்றுத்தருவார். நாங்கள் இருவருமே நல்ல உடல்தகுதியோடு இருக்க விரும்புகிறோம். ஒருமுறை நான் அவரிடம், ‘எனக்கு பறக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது’ என்றேன். உடனே அவர் பறக்கும் ஆசனம் என்று கூறி, புதுமையான ஆசனம் ஒன்றை எனக்கு கற்றுத்தந்தார். அதையும் நான் வலை தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். பலரும் அதை பார்த்துவிட்டு பாராட்டினார்கள். வாழ்க்கையும் யோகா போன்றதுதான். அதையும் சரியான ‘பேலன்ஸ்’ செய்ய கற்றுக் கொள்ளவேண்டும். சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும், தேவையற்ற விஷயங்களை மறக்கவும் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். எங்களுக்கு ‘ஜிம்’தான் கோவில். அங்குதான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கிறது. அதனால் திருமணநாளில்கூட முதலில் ‘ஜிம்’மிற்குதான் போனோம். உடற்பயிற்சி, உயிர்போல எங்களுடன் இணைந்துவிட்டது’’ என்கிறார் பிபாஷா.

Next Story