படப்பிடிப்பில் தொல்லைகள் கொடுத்தேனா? நடிகர் நாகசவுரியா புகாருக்கு சாய்பல்லவி பதில்
தெலுங்கு நடிகர் நாகசவுரியா புகாருக்கு நடிகை சாய்பல்லவி பதில் அளித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. தற்போது ஏ.எல்.விஜய் இயக்கிய ‘கரு’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். தனுஷ் ஜோடியாக மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் சாய்பல்லவி மீது தெலுங்கு நடிகர் நாகசவுரியா சமீபத்தில் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இருவரும் கரு படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் கனம் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது. நாகசவுரியா கூறும்போது சாய்பல்லவி படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வரமாட்டார். தாமதமாகவே வருவார். அவருக்கு நடிப்பதில் ஈடுபாடு கிடையாது. படப்பிடிப்பில் எல்லோரையும் கஷ்டப்படுத்தினார் என்று கூறியிருந்தார். நடிகர் நானிக்கும், சாய்பல்லவிக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து சாய்பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து சாய்பல்லவி கூறியதாவது:–
‘‘எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. நான் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எப்போதுமே மரியாதை கொடுக்கிறேன். படப்பிடிப்பில் நான் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததாக நாகசவுரியா சொன்னதை கேட்டு வருத்தப்பட்டேன். டைரக்டர் விஜய்க்கு போன் செய்து என்னால் படப்பிடிப்பு குழுவினர் கஷ்டப்பட்டதாக உங்களிடம் யாரேனும் புகார் செய்தார்களா? என்று கேட்டேன். அவர் இல்லை என்றார்.
படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் தொல்லை கொடுத்தேனா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார். இந்த நிலையில் நாகசவுரியா என்மீது குறை கூறியிருப்பது வியப்பாக உள்ளது. என்னுடன் அவருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் படப்பிடிப்பிலேயே கேட்டு இருக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு குறை சொல்வது ஏன் என்று புரியவில்லை.’’
இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.
Related Tags :
Next Story