ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் ஏலத்துக்கு வருகிறது
ஸ்ரீதேவி வரைந்த ஓவியத்தை துபாயில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி 50 ஆண்டுகள் திரையுலகில் இருந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுகமான காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரும் இருக்கிறது.
16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரூ.9 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார். அந்த படத்தில் நடித்த கமல்ஹாசன் ரூ.27 ஆயிரமும், ரஜினிகாந்த் ரூ.3 ஆயிரமும் சம்பளம் பெற்றுள்ளனர். இந்தி பட உலகுக்கு சென்ற பிறகு தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார்.
ஸ்ரீதேவி பற்றிய பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. வெளியில் தெரியாமல் நிறைய பேருக்கு உதவிகள் செய்ததாகவும், மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவியதாகவும் இணையதளங்களில் பலர் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். ஓவியம் வரைவதிலும் ஸ்ரீதேவிக்கு ஈடுபாடு இருந்துள்ளது.
வீட்டில் ஓய்வாக இருக்கும்போது இயற்கை காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை ஓவியமாக தீட்டி வைத்துள்ளார். உயிருடன் இருந்தபோது தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு, தான் வரைந்த பெண் ஓவியம் ஒன்றை வழங்கி இருக்கிறார். அந்த ஓவியத்தை துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏலத்துக்கு வர இருக்கும் அந்த ஓவியம் இணையதளங்களில் தற்போது பரவி வருகிறது.
Related Tags :
Next Story