தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்த மம்தா மோகன்தாஸ்


தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்த மம்தா மோகன்தாஸ்
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 8 March 2018 3:28 AM GMT)

நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வந்தார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், நடிகை மம்தா மோகன்தாஸ். “ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிப்பேன்” என்று அவர் கூறினார்.

1986-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான ‘ஊமை விழிகள்’ மிகப்பெரிய திகில் படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை அரவிந்தராஜ் டைரக்டு செய்திருந்தார்.

32 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஊமை விழிகள்’ என்ற பெயரில் மீண்டும் ஒரு புதிய படம் தயாராகுகிறது. பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை ஆகாஷ் சாம் டைரக்டு செய்கிறார். முழுக்க முழுக்க நடிப்பு பயிற்சி கல்லூரி மாணவர்களால் இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தில் ‘சிவப்பதிகாரம்’, ‘குசேலன்’, ‘குரு என் ஆளு’ உள்பட சில படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘தடையற தாக்க’ படத்தில் அருண்விஜய் ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முழுக்க முழுக்க மலையாள படங்களிலேயே நடித்து வந்த மம்தா மோகன்தாஸ், 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

இதுபற்றி மம்தா மோகன்தாஸ் கூறியதாவது:-

“7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்திருக்கிறேன். இளம் இயக்குனர், ஒளிப்பதிவாளர் முக்கியமாக என் நடன குரு பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது பழைய படத்தின் தொடர்ச்சி அல்ல. முற்றிலும் புதிய கதைதான். இதன்மூலம் எனது சினிமா பயணத்தை மீண்டும் தொடர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் மனதில் மீண்டும் நான் இடம்பிடிப்பேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

‘ஊமை விழிகள்’ படத்தை தொடர்ந்து ‘உள்ளே வெளியே’ படத்தின் 2-ம் பாகத்திலும் மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story