அம்மா இறந்த 10 நாட்களில் ஸ்ரீதேவி மகள், மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தார்


அம்மா இறந்த 10 நாட்களில் ஸ்ரீதேவி மகள், மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தார்
x
தினத்தந்தி 10 March 2018 10:45 PM GMT (Updated: 10 March 2018 8:42 PM GMT)

ஸ்ரீதேவி இறந்த 10 நாட்களில், அவருடைய மகள் ஜான்வி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

நடிகை ஸ்ரீதேவி இறந்த 10 நாட்களில், அவருடைய மகள் ஜான்வி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விக்கு 21 வயது ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ‘தடக்’ என்ற இந்தி படத்தில், அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற்றது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீதேவி திடீர் மரணம் அடைந்தார். தாயை இழந்த ஜான்வி சோகத்தில் மூழ்கினார். இதனால், ‘தடக்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஜான்வியை வைத்து மீண்டும் எப்போது படப்பிடிப்பை நடத்துவது? என்று தயாரிப்பாளர் தவித்து வந்தார்.

தயாரிப்பாளரின் தவிப்பை புரிந்து கொண்ட ஜான்வி, தயாரிப்பாளருக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என்று எண்ணி, தாய் ஸ்ரீதேவி இறந்த 10-வது நாளில், ‘தடக்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த சமயத்தில், அவருடைய பிறந்தநாள் வந்தது. பிறந்த நாளை ஜான்வி அமர்க்களமாக கொண்டாடவில்லை. உறவினர்களுடன் தனது வீட்டில், ‘கேக்’ வெட்டி மிக எளிமையாக கொண்டாடினார்.

அப்போது அவர் சிரித்தபடி இருந்ததை பார்த்து, “அம்மா இறந்த பத்து நாளில் ஜான்வி சிரித்தபடி பிறந்த நாளை கொண்டாடுகிறாரே என்று சிலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள். அந்த கேலி மற்றும் கிண்டல்களை ஜான்வி பொருட்படுத்தவில்லை.

‘தடக்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்த டைரக்டர் ஷசாங் கைதன் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கிடையில், ‘தடக்’ படம் கைவிடப்பட்டதாக சிலர் வதந்திகளை பரப்பினார்கள். அதை ஜான்வி கண்டுகொள்ளவில்லை. கொல்கத்தா படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் தயாராகி வருகிறார்.

Next Story