இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதை தடுக்க கூடாது : இந்தி நடிகை கங்கனா ரணாவத்


இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதை தடுக்க கூடாது : இந்தி நடிகை கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 19 March 2018 11:30 PM GMT (Updated: 19 March 2018 11:17 PM GMT)

இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதை தடுக்க கூடாது என இந்தி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

இந்தி நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். ஹிருத்திக் ரோஷன் காதலித்து ஏமாற்றியதாக புகார் கூறினார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஒரு படத்தில் நடிக்க அவர் ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கங்கனா ரணாவத் பேசியதாவது:-

“இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது சரியான நடவடிக்கை இல்லை. அவர்கள் நமது படங்களில் நடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பது குறித்தும் கருத்து சொல்லப்படுகிறது. அமெரிக்கர்கள் தேசிய கீதம் ஒலித்தால் எழுந்து நிற்கிறார்கள். நாம் எழுந்து நிற்பதற்கு எதற்காக வெட்கப்பட வேண்டும்?

நாட்டை பற்றி சிலர் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாட்டில் உள் கட்டமைப்புகள் சரியாக இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். உள் கட்டமைப்பில் குளறுபடி உள்ளது என்றால் அதை சரி செய்ய வேண்டியது இளைஞர்கள் கடமை. அதை செய்யாமல் குறை சொல்வதில் நியாயம் இல்லை.

எனது வாழ்க்கையில் இந்தியாவின் வளர்ச்சியை பார்க்க விரும்புகிறேன். இந்தியன் என்பது எனது அடையாளமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்தால்தான் நானும் வளர முடியும். பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். டீ விற்றவர் பிரதமர் ஆகி இருப்பது ஜனநாயகத்தின் வெற்றி. நான் மோடியின் தீவிர ரசிகை.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story