கணவர் மீது கன்னட நடிகை கொலை முயற்சி புகார்


கணவர் மீது கன்னட நடிகை கொலை முயற்சி புகார்
x
தினத்தந்தி 22 March 2018 10:45 PM GMT (Updated: 22 March 2018 7:41 PM GMT)

கணவர் மீது கன்னட நடிகை கொலை முயற்சி புகார் அளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகை சைத்ரா. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி போத்ரா என்பவருக்கும் 2006-ல் காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் தன்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக சைத்ரா புவனேஸ்வரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகார் மனுவில் நடிகை சைத்ரா கூறியிருப்பதாவது:-

திருமணத்துக்கு பிறகு எனது கணவர் என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார். மோசமான வார்த்தைகளால் திட்டினார். சித்ரவதை செய்தார். நான் வெளியே செல்லும்போதெல்லாம் துப்பாக்கியுடன் அடியாட்களை என்னுடன் அனுப்பினார். எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றால் கூட அடியாட்கள் பின் தொடர்ந்தனர்.

சினிமாவில் நடிக்கக்கூடாது என்றும் தடுத்தார். சில டெலிவிஷன் தொடர்கள் தயாரித்தேன். அதில் வந்த லாபத்தையும் பறித்துக்கொண்டார். காரில் இருவரும் பயணம் செய்யும்போதும் தகராறு நடக்கும். என் தலையில் ஓங்கி குட்டுவார். கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்யவும் முயன்றார். அவர் தாக்கியதில் எனக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளேன். இன்னொரு பெண்ணுடன் எனது கணவருக்கு கள்ளத்தொடர்பும் இருந்தது.” இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story