சமூக வலைத்தளங்களை வெறுக்கும் கங்கனா ரணாவத்


சமூக வலைத்தளங்களை வெறுக்கும் கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 17 April 2018 10:15 PM GMT (Updated: 17 April 2018 8:14 PM GMT)

சமூக வலைத்தளங்களை வெறுப்பதாக கங்கனா ரணாவத் கூறினார்.


நடிகர்-நடிகைகளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஆண்ராய்டு போன் என்று சமூக வலைத்தளங்கள் முக்கிய அங்கமாகி விட்டன. சதாகாலமும் அதிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களையும் சமூக விஷயங்கள் குறித்த கருத்துகளையும் உடனுக்குடன் அவைகளில் பதிவு செய்கிறார்கள்.

ஆனால் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு சமூக வலைத்தளங்கள் என்றாலே அலர்ஜியாம். எப்போதும் அதில் இருந்து தள்ளியே இருக்கிறார். இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:-

“மற்ற நடிகர்-நடிகைகளைப்போல் சமூக வலைத்தளங்களில் புழங்க எனக்கு ஆர்வம் இல்லை. அவை நமது நேரத்தை விரயம் செய்கின்றன என்பது எனது கருத்து. அதில் செலவிடும் நேரத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு ஒதுக்கலாம். நிறைய பேர் சமூக வலைத்தளத்தில் ஒரு அக்கவுண்ட் வைத்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் வற்புறுத்தினர். நான் ஏற்கவில்லை.

நான் விளம்பர தூதுவராக இருக்கும் சில நிறுவனங்கள் சமூக வலைத்தளத்தில் நீங்கள் இருந்தால் எங்கள் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்றனர். அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் சிலர் நீங்கள் கணக்கு மட்டும் தொடங்குங்கள். நாங்கள் அவற்றில் உங்களை பற்றிய செய்திகளை பதிவிடுகிறோம் என்றனர். மக்களுக்கு என்பெயரால் அப்படி ஒரு மோசடி நடப்பதை நான் விரும்பாததால் அதற்கும் சம்மதிக்கவில்லை.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story