தாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை ஓரணியில் திரட்டி உள்ளது ‘காலா’ படம் குறித்து கராத்தே தியாகராஜன் கருத்து


தாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை ஓரணியில் திரட்டி உள்ளது ‘காலா’ படம் குறித்து கராத்தே தியாகராஜன் கருத்து
x
தினத்தந்தி 7 Jun 2018 11:45 PM GMT (Updated: 7 Jun 2018 9:19 PM GMT)

தாத்தாக்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் ‘காலா’ படம் ஓரணியில் திரட்டி உள்ளது என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் குறித்து தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியலைப் பொறுத்தமட்டில் யார், யாரெல்லாம் கடும் எதிர்ப்புகளுக்கு ஆளானார்களோ அவர்கள் எல்லாம் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறார்கள். மறைந்த எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய காலத்தில் அவரது சினிமா செல்வாக்கையும் மீறி அவருக்கு பலவிதமான எதிர்ப்பு அலைகள் காணப்பட்டன.

அந்த நேரத்தில் தயாராகிக் கொண்டிருந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்தி இருந்தது. பலவிதமான தடைகளை மீறி படம் வெளியாகி இமாலய வெற்றியை பெற்றவுடன் அவர் அசைக்க முடியாத தலைவர் ஆனார். மக்கள் மத்தியில் மங்காப் புகழ் பெற்றார்.

அதே போல் ஏராளமான எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் முறியடித்து இன்றைக்கு வெளியான ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படம் உலகளாவிய வெற்றியை பெற்றிருக்கிறது. தனிமனித நேர்மை, குடும்ப பாசம், மனிதநேயம், தன்னலமற்ற பொதுச்சேவை போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட ‘காலா’ பத்தாயிரம் வாலா பட்டாசாக வெடித்து பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து, கேள்வி எழுப்பியவர்கள் சில்லூண்டித்தனமான சில்மிஷங்களில் ஈடுபட்ட சினிமாக்காரர்கள், செல்லாக்காசாகிப் போன அற்ப சிந்தனையாளர்கள் இப்படி எல்லோரது முகத்திலும் கொதிக்கின்ற தார் பூசி துடிக்க வைத்திருக்கிறது ‘காலா’.

தாத்தாக்கள் முதல் சிறுவயது குழந்தைகள் வரை அனைவரையும் ஓரணியில் திரட்டி கரைகாணாத மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறது ‘காலா’.

ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர் என்பது போலவும், செல்வாக்கு இழந்தவர் என்றும், தாக்குபிடிக்க மாட்டார் என்றும் பச்சையாகவும், கொச்சையாகவும் விமர்சித்து வரும் உளறுவாய்காரர்களின் வாய்களில் ஆசிட்டை ஊற்றி இருக்கிறது, ‘காலா’வுக்கு தலைமுறை தாண்டிய மக்கள் ஆதரவு.

மொழி, இன, உணர்வுகளை தூண்டிவிட்டு ரஜினிகாந்தை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த நினைத்த குள்ளநரிகளின் சூழ்ச்சி இந்தநாளில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடக்கம் தான். இனிவரும் எழுச்சியை யாராலும் எதிர்கொள்ள இயலாது என்பதே ஜூன் 7-ந் தேதி எடுத்துக்காட்டும் உணர்ச்சிகரமான அறிவிப்பு.

ஒடுக்கப்பட்டோரின் குரலாக நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ‘காலா’ நாயகன் ரஜினிகாந்துக்கும், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story