கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் 4 வேடங்களில் நடிகர் சூர்யா?


கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் 4  வேடங்களில்  நடிகர்  சூர்யா?
x
தினத்தந்தி 30 Jun 2018 11:00 PM GMT (Updated: 30 Jun 2018 5:35 PM GMT)

செல்வராகவன் இயக்கும் ‘என்ஜிகே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதில் அரசியல்வாதியாக அவர் நடித்து இருப்பதாக தகவல்.

‘என்ஜிகே’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது சூர்யாவின் 37–வது படமாகும். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாற்றான், அயன் ஆகிய 2 படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இப்போது மூன்றாவது தடவையும் இணைவதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் சூர்யா 4 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசமாக தோன்றுகிறாராம். மாற்றான் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இவர் 2014–ல் விஜய்யின் ஜில்லாவில் நடித்த பிறகு மீண்டும் இப்போது சூர்யா படத்தில் நடிக்கிறார். தெலுங்கு கதாநாயகன் அல்லு சிரிஷும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இவர்களுடன் வின்சென்ட் அசோகனும் நடிக்கிறார்.

இதனை அல்லு சிரிஷ் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். சூர்யாவுடன் நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தி நடிகர் போமன் இரானியும் சூர்யாவுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்தி பட உலகில் பிரபல நடிகராக இருக்கிறார். முன்னாபாய் எம்.பி.பி.எஸ், 3 இடியட்ஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி உள்ளது. இதற்காக சூர்யா லண்டன் சென்றுள்ளார். பிரேசில், நியூயார்க் நகரங்களிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

Next Story