“சமந்தா சினிமாவை விட்டு விலக மாட்டார்” -நடிகர் நாகசைதன்யா


“சமந்தா சினிமாவை விட்டு விலக மாட்டார்” -நடிகர் நாகசைதன்யா
x
தினத்தந்தி 11 July 2018 10:00 PM GMT (Updated: 11 July 2018 8:51 PM GMT)

சமந்தா தமிழ், தெலுங்கில் அதிகமான படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

சமந்தா தமிழ், தெலுங்கில் அதிகமான படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் வாய்ப்புகள் குறையவில்லை. அவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நடிகையர் திலகம், இரும்புத்திரை, தெலுங்கில் ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதிக வசூலும் ஈட்டியது.

இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், தமிழ், தெலுங்கில் தயாராகும் யூடர்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா முடிவு செய்து இருப்பதாகவும் இதற்காக சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் தகவல்கள் பரவின. கணவர் குடும்பத்தினரும் சமந்தா தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து சமந்தாவின் கணவரும் நடிகருமான நாகசைதன்யா கூறும்போது, “சமந்தா சினிமாவை விட்டு விலக மாட்டார். அவருக்கு அதிக படங்கள் உள்ளன. ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போட மாட்டார். சமந்தா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன” என்றார்.

சக நடிகையான நயன்தாராவை டுவிட்டரில் சமந்தா பாராட்டி உள்ளார். நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த சமந்தா “டிரெய்லர் சூப்பராக உள்ளது. நயன்தாராவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story