சஞ்சய்தத் வாழ்க்கையை வைத்து இன்னொரு படம்
இந்தி நடிகர் சஞ்சய்தத் உண்மை கதையை படமாக்கப் போவதாக பிரபல இந்தி டைரக்டர் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சஞ்சு’ என்ற பெயரில் தயாரான படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இந்த படத்தில் சஞ்சய்தத் கதாபாத்திரத்தில் ரன்வீர் கபூரும், மறைந்த நடிகை நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் மற்றும் அனுஷ்கா சர்மா, பரேஷ் ராவல், சோனம் கபூர், தியா சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சஞ்சய்தத்தின் ஆடம்பரமான இளம் வயது வாழ்க்கை, பெண்களுடன் தொடர்புகள், சிறை வாழ்க்கை அனைத்தையும் படத்தில் காட்சிபடுத்தி இருந்தனர். இந்த நிலையில் சஞ்சய்தத் உண்மை கதையை படமாக்கப் போவதாக பிரபல இந்தி டைரக்டர் ராம்கோபால் வர்மா அறிவித்து உள்ளார்.
1993–ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவம், சட்டவிரோதமாக ஏ.கே.56 ரக துப்பாக்கியை வைத்து இருந்ததற்காக சஞ்சய்தத் கைதானது ஆகியவற்றை மட்டும் மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கப்போவதாக அவர் கூறியுள்ளார். படத்துக்கு ‘சஞ்சு, த ரியல் ஸ்டோரி’ என்ற தலைப்பையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த படத்துக்காக சஞ்சய் தத்துடன் நெருங்கி பழகியவர்களை சந்தித்து தகவல்களை ராம்கோபால் வர்மா திரட்டி வருகிறார். நடிகர்–நடிகைகள் தேர்வும் நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
Related Tags :
Next Story