‘‘தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில், நான் இல்லை’’ –ஸ்ரீபிரியங்கா விளக்கம்


‘‘தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில், நான் இல்லை’’ –ஸ்ரீபிரியங்கா விளக்கம்
x
தினத்தந்தி 21 July 2018 10:15 PM GMT (Updated: 21 July 2018 6:20 PM GMT)

நான் எந்த தயாரிப்பாளரின் அல்லது மானேஜரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று நடிகை ஸ்ரீபிரியங்கா கூறியுள்ளார்.

வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், பிச்சுவா கத்தி, கங்காரு ஆகிய படங்களில் நடித்தவர், ஸ்ரீபிரியங்கா. இவர் இப்போது, ‘மிக மிக அவசரம்,’ ‘ஜெஸ்ஸி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர், ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில், ஒரு தகவல் பரவியிருக்கிறது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த தகவல் கூறியது.

இதை ஸ்ரீபிரியங்கா மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:–

‘‘சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிக தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன். முதலில் ஒரு வி‌ஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்த தயாரிப்பாளரின் அல்லது மானேஜரின் கட்டுப்பாட்டிலும் இல்லை. திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் சுதந்திரமான நடிகை, நான்.

இதுவரை நான் 10–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். அடுத்து என் நடிப்பில், ‘ஜெஸ்ஸி’ என்ற படம் வெளியாக உள்ளது. இதுவரை என் நடிப்பையும், நடத்தையையும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படித்தான் இருப்பேன். எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்கு பிடித்த–எந்த பிரச்சினையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக்கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், கதாநாயகன் என எதற்காகவும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை.’’

இவ்வாறு ஸ்ரீபிரியங்கா கூறியிருக்கிறார்.

Next Story