‘இமைக்கா நொடிகள்’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு


‘இமைக்கா நொடிகள்’ படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Aug 2018 11:00 PM GMT (Updated: 30 Aug 2018 8:30 PM GMT)

நடிகர்கள் விஜய்சேதுபதி, அதர்வா, நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர்கள் விஜய் சேதுபதி, அதர்வா, நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். கேமியோ புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம், படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் வினியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகிரீன் நிறுவனம் இந்த படத்தின் செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு பகுதி வினியோக உரிமையை ஆர்.வி.மீடியா என்ற நிறுவனத்துக்கு ரூ.4 கோடிக்கு வழங்கியுள்ளது.

நிபந்தனை

இந்தநிலையில் இப்படத்தை ஸ்ரீகிரீன் நிறுவனமே வினியோகம் செய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அதை எதிர்த்து ஆர்.வி.மீடியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி எம்.சுந்தர் விசாரித்தார். அப்போது ஆர்.வி.மீடியா உடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக ஸ்ரீகிரீன் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி எம்.சுந்தர் நிபந்தனைகளுடன் இந்த படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ரூ.4 கோடி

அந்த உத்தரவில், ‘இந்த படத்தின் மூலம் இதுவரை வசூலித்த தொகையையும், தற்போது கையில் உள்ள தொகையையும், இந்த படத்தை திரையிடுவதன் மூலம் செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு ஆகிய பகுதிகளில் கிடைக்கும் தொகையையும் இந்த ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கை செப்டம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். செப்டம்பர் 12-ந்தேதிக்கு முன்பாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.4 கோடியை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் செலுத்திவிட்டால், அதற்குமேல் பணத்தை செலுத்த தேவையில்லை. மேலும், இந்த ஐகோர்ட்டு உத்தரவு சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் ஆணையராக வக்கீல் கே.ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கிறேன்’ என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து கேமியோ நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அவசர வழக்காக நேற்று மாலையில் விசாரித்தார்கள்.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஓம்.பிரகாஷ், எதிர்மனுதாரர் சார்பில் வக்கீல் ஹரிசங்கர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள நிபந்தனையை மாற்றி அமைத்து உத்தரவிட்டனர்.

காட்சிகள் ரத்து

அதாவது, ‘இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் இதுவரை கிடைத்த தொகையை தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் செலுத்த தேவையில்லை. இந்த படத்தை வெளியிட்டதன் மூலம், இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகையை செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

ஐகோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கினால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் இமைக்கா நொடிகள் படத்தின், காலை, மதியம் காட்சிகள் நேற்று ரத்துசெய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story