படப்பிடிப்பில் மலர்ந்த காதல் : டைரக்டரை மணந்த கதாநாயகி


படப்பிடிப்பில் மலர்ந்த காதல் : டைரக்டரை மணந்த கதாநாயகி
x
தினத்தந்தி 6 Sep 2018 12:00 AM GMT (Updated: 5 Sep 2018 6:48 PM GMT)

‘பேய் எல்லாம் பாவம்’ என்ற படத்தை டைரக்டு செய்துள்ளவர் தீபக் நாராயன். இதில் கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக டோனா சங்கர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பில் தீபக் நாராயனுக்கும், டோனா சங்கருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தகவலை டோனா சங்கர் சென்னையில் நடந்த ‘பேய் எல்லாம் பாவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

விழாவில் அவர் பேசும்போது, ‘‘தீபக் நாராயன் உதவி இயக்குனராக இருக்கும்போதே எனக்கு தெரியும். அவர் ‘பேய் எல்லாம் பாவம்’ படத்துக்கு டைரக்டர் ஆனதும் என்னையே அதில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்போது இருவரும் காதலித்தோம். அதன்பிறகு திருமணமும் செய்துகொண்டோம். அவர் இப்போது எனது கணவராக இந்த மேடையில் இருக்கிறார். படத்தின் டிரெய்லர், பாடல்களை பார்த்து அவருக்கு அழுகை வந்தது. இந்த படம் வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.

விழாவில் டைரக்டர் பேரரசு கலந்துகொண்டு பேசும்போது, ‘‘மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள இயக்குனர் தீபக் நாராயன் பிரபல இயக்குனர்கள் பாசில், சித்திக் ஆகியோரைப்போல் உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழி தேவை இல்லை. பேய் எல்லாம் பாவம் படத்தின் பாடல்களும், டிரெய்லரும் சிறப்பாக வந்துள்ளது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதுபோல் எந்த அரசியல்வாதியும் செய்யவில்லை’’ என்றார்.

டைரக்டர்கள் ஏ.வெங்கடேஷ், ராசி அழகப்பன், ஜாகுவார் தங்கம், நடிகர் மைம்கோபி, அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, படத்தின் தயாரிப்பாளர் ஹன்ஸிபாய், இசையமைப்பாளர் நவீன் சங்கர் உள்பட பலர் பேசினார்கள்.

Next Story