லக்னோ புறப்பட்டு சென்றார் : மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்


லக்னோ புறப்பட்டு சென்றார் : மீண்டும்  படப்பிடிப்பில் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 6 Sep 2018 11:30 PM GMT (Updated: 6 Sep 2018 6:54 PM GMT)

‘காலா’வுக்கு பிறகு கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, குருசோமசுந்தரம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜூன்மாதம் தொடங்கியது.

ரஜினிகாந்த் மேற்கு வங்கத்தில் 35 நாட்கள் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை திரும்பி சில நாட்கள் ஓய்வு எடுத்த அவர் உத்தரகாண்டில் நடந்த 2–வது கட்ட படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்தார். அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினியுடன் திரிஷா, சிம்ரன் ஆகியோர் சேர்ந்து நடித்த காட்சிகளையும் எடுத்தனர்.

அதன்பிறகு சென்னை திரும்பி அரசியல் பணிகளை கவனித்தார். மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்த அறிவுரை புத்தகத்தையும் வெளியிட்டார். இப்போது 3–வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க நேற்று லக்னோ புறப்பட்டுச் சென்றார். இந்த மாதம் இறுதிவரை அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். அத்துடன் படப்பிடிப்பு நிறைவு கட்டத்துக்கு வந்து விடும் என்று தெரிகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக தகவல். பகலில் அந்த வேலையை பார்த்துக்கொண்டு இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளை களையெடுப்பார் என்று கூறுகின்றனர். முந்தைய கபாலி, காலா படங்களிலும் தாதாவாகவே வந்தார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

கார்த்திக் சுப்புராஜ் 2 மாதங்களாக பல்வேறு பெயர்களை பரிசீலித்தார். இப்போது படத்தின் பெயரை அவர் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. படத்தலைப்பையும் ரஜினிகாந்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள்.

Next Story