அம்மாவிடம் அடி வாங்கினேன்.. ஆனால் என் மகளை அடிப்பதில்லை.. கஜோலின் குழந்தை வளர்ப்பு ரகசியம்


அம்மாவிடம் அடி வாங்கினேன்.. ஆனால் என் மகளை அடிப்பதில்லை.. கஜோலின் குழந்தை வளர்ப்பு ரகசியம்
x
தினத்தந்தி 14 Oct 2018 8:05 AM GMT (Updated: 14 Oct 2018 8:05 AM GMT)

“என்னுடைய கொள்ளுப்பாட்டியும், பாட்டியும் மிக வலிமையான பெண்கள். அவர்கள் நிறைய விஷயங்களில் தனிப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கைகளின்படி செயல்பட்டார்கள்.

விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது, தங்கள் வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி நடத்துவது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களின் அந்த உறுதியைப் பின்பற்றியதுதான் என்னுடைய வாழ்க்கையையும், நான் எடுக்கும் முடிவுகளையும் எளிதாக்கி இருக்கின்றன. அந்த வலிமையான பெண்களுடன் வாழ்ந்ததுதான் நானும் உறுதியாக இருப்பதையும், ஒரு முடிவெடுத்து அதில் நிற்பதையும் எனக்கு கற்றுத்தந்திருக்கின்றன. எனது குணங்களில் பாட்டிகளின் தாக்கம் நிறைய உண்டு” என்று பாட்டிகளை பற்றி பெருமையோடு சொல்கிறார், பிரபல இந்தி நடிகை கஜோல். புன்னகை மூலம் புகழ் பெற்ற இவர், திரை உலகில் தைரியம் நிறைந்தவராகவும் குறிப்பிடப்படுகிறார்.

அவரது இயல்புகளை பற்றி தொடர்ந்து பேசுவோம்..

சிறு வயதில் நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தீர்கள்?

“நான் ஒரு சுட்டிக் குழந்தை! இப்போதும் சில நேரங்களில் என் அம்மா சொல்வதுண்டு, ‘கடவுளுக்கு நன்றி... நீ வளர்ந்துவிட்டாய். உன்னைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் பொறுப்பில் இருந்து நான் விடைபெற்றுவிட்டேன்’ என்பார். எனது தந்தை, எல்விஸ் பிரெஸ்லியின் இந்தப் பாடலை என்னைப் பார்த்துப் பாடுவார்... (புன்னகையுடன் பாடுகிறார்) ‘நீ ஒரு தேவதை போலிருக்கிறாய், நீ ஒரு தேவதை போல நடக்கிறாய், நீ ஒரு தேவதை போலப் பாடுகிறாய்... ஆனால் நீ பொய் வேடம் பூண்ட ஒரு பிசாசு’...! இதுதான் அந்த பாடல். எனது குழந்தைப் பருவத்தை அப்படியே சொல்லும் வரிகள் இவை. ‘அம்மா பக்கத்தில் இருக்கும்போது நீ ரொம்பச் சரியாய், இனிமையாய் நடந்துகொள்கிறாய், எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறாய். அவள் அருகில் இல்லாவிட்டால் என்ன ஆகிவிடுகிறது உனக்கு?’ என்று கேட்பார், அப்பா. அம்மாவோ, ‘உன்னை மாதிரியே உனக்கும் ஒரு குழந்தை பிறக்கணும்’ என்பார்..” (மறுபடியும் சிரிக்கிறார்).

நீங்கள் உங்கள் அம்மாவுடன் சரிக்குச் சமமாய் பேசியதுண்டா?

“இல்லை. அப்படிப் பேசினால் அவர் அறைந்தே விடுவார். அவருக்கு எதிராக நான் சற்றுக் குரலை உயர்த்தக்கூட முடியாது. இன்றும் எங்கம்மாவை எதிர்த்துப் பேச எனக்குத் தைரியம் கிடையாது”

பொதுவாக இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் குறித்து உங்கள் கருத்து?

‘‘நான் எப்போதும் என் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருப்பேன். ஆனால் அவர்களை அடிப்ப தில்லை. அவர்கள் மீதுள்ள அன்பால்தான் நான் அவ்வளவு கண்டிப்புக் காட்டுகிறேன் என்று அவர் களுக்கும் தெரியும். நான் அவர்கள் மீது கண்டிப்பாக இருந்திராவிட்டால் அவர்கள் வேறு விதமாக வளர்ந்திருப்பார்கள். நான் அவர்களுக்கு அளவுக்கு மீறிச் சுதந்திரம் கொடுத்து தங்கள் இஷ்டப்படி நடந்துகொள்ளலாம் என்று விட்டிருந்தால், யாரும் தங்களுக்கு எதற்கும் மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்ற மனநிலைக்கு அவர்கள் வந்திருப்பார்கள். ஒழுங்கு என்பது, படரும் கொடியை முறையாகப் பந்தலிட்டு வளர்ப்பது போலத்தான். இல்லாவிட்டால் அது கண்டபடி வளர்ந்துவிடும்”

உங்கள் மகள் ‘நைசா’, உங்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாரா?

“ஆம். அவள் எனது அழகுசாதனப் பொருட்கள், காலணிகளைக்கூட பகிர்ந்துகொள்கிறாள் (சிரிக்கிறார்). அப்படிப்பட்ட அம்மா-மகள் உறவுதான் எங்களுடையது. நாங்கள் இருவரும் நிறைய விஷயங்கள் குறித்துப் பேசுவோம். ஆனால் எல்லா விஷயங்களையும் அல்ல. காரணம், கடைசியில், நான் அவளின் அம்மா. இப்போதும் நான் சிலநேரங்களில் அவளைத் திட்டத்தான் செய்கிறேன். அப்போதெல்லாம், ‘ஏன் மம்மி இப்படித் திட்டுறீங்க?’ என்பாள். ஆனால் பொதுவாக, எங்களுக்கு இடையிலான உறவு இனிமையானது”

தற்போது அவர் படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். அதனால் இருவருக்கும் இடையிலான அன்பு அதிகரித்திருக்கிறதா?

“எங்களுக்கு இடையில் அன்பு கூடியிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் முன்பு போல எங்களுக்கு இடையில் அதிகம் சண்டை வருவது கிடையாது. அவளைப் பிரிந்திருக்கும் வருத்தம் இருக்கிறது. இருவரும் நேரில் சந்திக்கும்போதெல்லாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ‘அவள் அகன்றபிறகு சூரியப் பிரகாசம் இல்லை’ என்ற பாடலை நான் அடிக்கடி கேட்டேன். ஆம், அப்படித்தான் இருக்கிறது. நான் என் குழந்தையை ‘மிஸ்’ செய்கிறேன்”

இப்போது நீங்கள் கொஞ்சம் ரிலாக்சாகவும் இருப்பீர்கள் இல்லையா?

“ஆமாம். ஒரு தாயாக நான் இப்போது ரொம்ப ரிலாக்சாக இருக்கிறேன். நமது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பது எல்லா தாய்மார்களுக்கும் நிம்மதியளிக்கும் விஷயம்”

Next Story