பெண் புகைப்பட கலைஞர் பாலியல் புகார் ‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் தியாகராஜன்


பெண் புகைப்பட கலைஞர் பாலியல் புகார் ‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் தியாகராஜன்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 9:06 PM GMT)

நடிகர் தியாகராஜன் மீது ‘பொன்னர் சங்கர்’ படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய பிரித்திகா மேனன் என்ற பெண் பாலியல் புகார் கூறியுள்ளார்.

மீ டூவில் பெண்கள் பாலியல் புகார்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் ஜான்விஜய், டி.எம்.கார்த்திக், டைரக்டர் சுசிகணேசன் ஆகியோர் இதில் சிக்கி உள்ளனர். இப்போது நடிகர் தியாகராஜன் மீது ‘பொன்னர் சங்கர்’ படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய பிரித்திகா மேனன் என்ற பெண் பாலியல் புகார் கூறியுள்ளார்.அலைகள் ஓய்வதில்லை, பில்லா ரங்கா, மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன், உள்பட பல படங்களில் தியாகராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச்சிவந்த வானம் படத்திலும் வந்தார். தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரித்திகா மேனன் முகநூலில் கூறியிருப்பதாவது:-

“நான் 2010-ல் கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடினேன். அப்போது எனக்கு 21 வயது. எனக்கு தெரிந்த ஒருவர் நடிகர் தியாகராஜன் இயக்கிய பொன்னர் சங்கர் படத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்ற என்னை சேர்த்து விட்டார். அந்த படத்தில் தியாகராஜன் மகன் பிரசாந்த் கதாநாயகனாக நடித்தார்.

கோவை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தியாகராஜன் என்னை அவர் அருகிலேயே எப்போதும் இருக்கும்படி கூறினார். தாய்லாந்து நாட்டில் உள்ள அழகான பெண்கள் தனக்கு மசாஜ் செய்து விட்டதாக படங்களை காட்டினார். அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறினார்.

அதை கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் கூசியது. ஒரு நாள் இரவு நான் தங்கி இருந்த ஓட்டல் அறை கதவை 3 முறை தட்டி உள்ளே நுழைய முயன்றார். நடு இரவிலும் அதிகாலை 2 மணி மற்றும் 4 மணிக்கும் கதவை தட்டினார். நான் திறக்கவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்தேன்.

மறுநாள் நான் கதவை தட்டியும் ஏன் திறக்கவில்லை என்றார். எனது ஜலதோஷத்துக்காக மருந்தும் பிராந்தியும் எடுத்து வந்ததாக கூறினார். அதன்பிறகு எனக்கு சம்பளம் தராமல் வேலையில் இருந்து நீக்கி விட்டனர்.”

இவ்வாறு பிரித்திகா மேனன் கூறியுள்ளார்.

Next Story