நடிகை சஞ்சனா கல்ராணி, விளம்பரத்திற்காக புகார் சொல்கிறார் - இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா


நடிகை சஞ்சனா கல்ராணி, விளம்பரத்திற்காக புகார் சொல்கிறார் - இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா
x
தினத்தந்தி 24 Oct 2018 11:30 PM GMT (Updated: 24 Oct 2018 8:07 PM GMT)

முத்த காட்சியை 50 முறை எடுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி, விளம்பரத்திற்காக புகார் சொல்கிறார் என்று இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா கூறினார்.

பெங்களூரு,

கன்னடத்தில் ‘கன்ட-ஹென்டதி’ (கணவன்-மனைவி) என்ற படத்தை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சஞ்சனா கல்ராணி நடித்தார். ‘மீ டூ’ இயக்கம் மூலம் பதிவை வெளியிட்ட நடிகை சஞ்சனா கல்ராணி, கன்ட-ஹென்டதி படத்தில் ஒரு முத்த காட்சியை 50 முறை எடுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா மீது புகார் தெரிவித்தார். இந்த புகாரை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சஞ்சனா கல்ராணி, இந்த ‘கன்ட-ஹென்டதி’ படப்பிடிப்பின்போது தனக்கு 16 வயது என்று கூறி இருக்கிறார். ஆனால் அந்த படப்பிடிப்பின்போது, அவரது தங்கை நிக்கி கல்ராணிக்கு 17 வயது என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்படி இருக்கும்போது சஞ்சனா கல்ராணிக்கு எப்படி 16 வயதாக இருக்க முடியும்?. இந்த படத்திற்கு முன்பு சஞ்சனா கல்ராணி 4 படங்களில் நடித்திருந்தார்.

இந்தியின் ‘மர்டர்’ என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தோம். அந்த படத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார். அந்த கதையம்சம் கொண்ட படத்தில் கன்னடத்தில் ஒரு துணிச்சல் மிக்க நடிகை வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த படத்தின் கதையை கேட்ட பெண்கள் அவற்றுக்கு ஒப்புக் கொள்ளவில்லை. சஞ்சனா கல்ராணி மட்டும் நடிப்பதாக ஒப்பந்தமானார்.

அவருக்கு படத்தின் முழு கதையையும் சொன்னோம். ‘மர்டர்’ படத்தின் டி.வி.டி.யையும் கொடுத்து அதை பார்க்க கூறினோம். அப்போது வாய்ப்புக்காக ஒப்புக்கொண்டு, இப்போது எங்கள் மீது புகார் கூறுகிறார். சினிமா படப்பிடிப்புக்கு பாங்காங் சென்றோம். படப்பிடிப்பு நடந்தபோது, அவரது தாயாரும் உடன் இருந்தார். அவரை கட்டாயப்படுத்தி எந்த காட்சியையும் எடுக்கவில்லை.

கன்னடத்தில் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகளை முழுவதுமாக மாற்றி அமைத்தோம். பெண்ணுக்கு மரியாதை இருக்கும்படி நாங்கள் பார்த்துக் கொண்டோம். அந்த ‘கன்ட-ஹென்டதி’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு நிறைய படங்கள் தேடி வந்தன.

திரைத்துறையில் வளர எங்கள் படம் அவருக்கு தேவைப்பட்டது. வளர்ந்த பிறகு எங்களை அவர் குற்றம் சொல்கிறார். இது சரியல்ல. விளம்பரத்திற்காக சஞ்சனா கல்ராணி புகார் கூறுகிறார் என்று ரவி ஸ்ரீவத்சா கூறினார்.

இந்த கருத்துக்கு நடிகை சஞ்சனா கல்ராணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

திருட்டுத்தனத்தில் ஈடுபட்டவர்கள் என்றாவது தாங்கள் திருடர்கள் என்று ஒப்புக்கொள்வார்களா? ரவி ஸ்ரீவத்சா தோல்வி அடைந்த இயக்குனர். வெறும் பொய்களை மட்டுமே பேசுகிறார். நான் ஒன்றும் சாதாரண நடிகை இல்லை.

நான் பல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர்கள் அனைவர் மீதும் இத்தகைய புகார்களை கூறவில்லை. ரவி ஸ்ரீவத்சா மோசமானவர் என்று கூறினார்.


Next Story