செல்பி எடுத்த இளைஞருக்கு புதிய செல்போன் - சிவகுமார் வாங்கி கொடுத்தார்


செல்பி எடுத்த இளைஞருக்கு புதிய செல்போன் - சிவகுமார் வாங்கி கொடுத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:15 PM GMT (Updated: 2 Nov 2018 7:48 PM GMT)

சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார்.


நடிகர் சிவகுமார் சமீபத்தில் மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர். அதில் ஒரு ரசிகர் தனது செல்போனில் சிவகுமாருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார். அந்த செல்போனை சிவகுமார் தட்டி விட்டார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த சிவகுமார், “பொது இடத்தில் பாதுகாவலர்களை தள்ளிவிட்டு செல்பி எடுப்பது என்ன நியாயம்” என்றார். பின்னர் செல்போனை தட்டி விட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார்.

“ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் எனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

மேலும் ராகுல் என்ற அந்த இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுக்கவும் சம்மதித்தார். ரூ.21 ஆயிரம் விலையில் சிவகுமார் வாங்கிய புதிய செல்போன் மதுரையில் உள்ள அந்த இளைஞரிடம் சிவகுமார் சார்பில் நேரில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து ராகுல் கூறும்போது “சிவகுமார் எனக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.


Next Story