கள்ளத் துப்பாக்கி விற்க முயன்ற நடிகர் கைது


கள்ளத் துப்பாக்கி விற்க முயன்ற நடிகர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2018 10:15 PM GMT (Updated: 5 Nov 2018 5:30 PM GMT)

பெங்களூரு அருகே உள்ள கே.நாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சையது சமீர் (வயது 32). இவர் பைனான்சியராக இருக்கிறார்

பெங்களூரு அருகே உள்ள கே.நாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சையது சமீர் (வயது 32). இவர் பைனான்சியராக இருக்கிறார். சையது சமீர் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்து இருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து ரூ.1.98 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

கள்ள நோட்டை மாற்றுவதில் சையது சமீருக்கும் சில தொழில் அதிபர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவர் வழக்கில் சிக்கியதும் தொழில் அதிபர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள முடிவு செய்து கன்னட நடிகர் ஜெகதீஷ் என்ற ஜாக்குவார் ஜக்கியை அணுகி அவர் மூலமாக கள்ளத்துப்பாக்கி வாங்க முயற்சி செய்துள்ளார்.

ஜெகதீஷ் கன்னடத்தில் வெளியான ‘சர்கார் தி புல்லட்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்றது. ஜெகதீஷ் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் தகவல் போலீசுக்கு தெரியவந்தது. பெங்களூரு எச். ஏ.எல் பகுதியில் நடிகர் ஜெகதீஷ் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் 7.65 எம்எம் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றி ஜெகதீசை கைது செய்தனர். மேலும் முகமது நிஜாம், சதீஷ்குமார், சையது சமீர் ஆகியோரும் கைதானார்கள்.

Next Story