இணையதளத்தில் சூர்யா படக்காட்சி கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி


இணையதளத்தில் சூர்யா படக்காட்சி  கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 Dec 2018 12:00 AM GMT (Updated: 12 Dec 2018 7:02 PM GMT)

செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய 2 படங்களில் சூர்யா நடிக்கிறார்.

என்.ஜி.கே படப்பிடிப்பை நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு விட்டதாகவும் இதனால் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின.

சூர்யா ரசிகர்களும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லரை எதிர்பார்த்து காத்து இருந்தனர். படம் எப்போது வரும் என்று செல்வராகவனுக்கு கேள்வி விடுத்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்.ஜி.கே படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. சூர்யா, ரகுல் பிரீத் சிங் நடிக்கும் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகின்றன. 

படப்பிடிப்பை காண ரசிகர்களும் குவிகிறார்கள். அப்போது படப்பிடிப்பு காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர். இது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் என்.ஜி.கே படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பது புரிகிறது. அவற்றை வெளியிட தயார் செய்து கொண்டு இருக்கிறோம். படம் வெளியாவது வரை உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள், பட காட்சிகளை கசிய விடாதீர்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story