பணத்தை திருப்பிதர மறுப்பு நடிகை மெஹ்ரீன் மீது புகார்
பணத்தை திருப்பி தரமறுப்பதாக நடிகை மெஹ்ரீன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் குஷி புகார் கொடுத்துள்ளார்.
தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் சுதிர்பாபு ஜோடியாக நடிக்க புதிய படமொன்றில் மெஹ்ரீனை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தை குஷி என்பவர் தயாரிப்பதாக இருந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் படத்துக்கு பூஜை போட்டு, மெஹ்ரீனுக்கு சம்பள முன்பணமும் வழங்கினர். இந்த நிலையில் படத்தில் இருந்து சுதிர்பாபு திடீரென்று விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சிரஞ்சீவியின் மருமகன் கல்யாணை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தனர். கதாநாயகன் மாறியதால் மெஹ்ரீனுக்கு பதிலாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்தார்.
இதனை மெஹ்ரீனிடம் தெரிவித்து அட்வான்சாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்க அவர் மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து மெஹ்ரீன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் குஷி புகார் கொடுத்துள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மெஹ்ரீன் கூறும்போது, “நான் குஷி தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதி ஒதுக்கி கொடுத்து இருந்தேன். அதை அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை. அந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்கியதால் இரண்டு புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துவிட்டேன். இதனால் வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது” என்றார். தெலுங்கு நடிகர் சங்கத்திலும் புகார் செய்துள்ளார்.
Related Tags :
Next Story