ரூ.60 ஆயிரம் வாடகை பாக்கி ஓட்டலில் நடிகை சிறைவைப்பு?


ரூ.60 ஆயிரம் வாடகை பாக்கி ஓட்டலில் நடிகை சிறைவைப்பு?
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 6:37 PM GMT)

ரூ.60 ஆயிரம் வாடகை பாக்கிக்காக ஓட்டலில் நடிகை சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் மலையாள நடிகை மஞ்சு சவேர்கர் கதாநாயகியாக நடித்து வந்தார். நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு விடுதியில் தங்கி இருந்தனர்.

அங்கிருந்து தினமும் காலையில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு இரவு விடுதிக்கு திரும்பினார்கள். வழக்கம்போல் இரவு நடிகை மஞ்சு சவேர்கரும் மற்ற நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு திரும்பினார்கள். மஞ்சு சவேர்கர் அறையில் படுக்கை விரிப்புகள் மாற்றப்படாமல் கிடந்துள்ளது. அதை பார்த்ததும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

விடுதியை விட்டு கிளம்புவதாக சொல்லிவிட்டு துணிமணிகளை எடுத்து சூட்கேசில் வைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால் ஊழியர்கள் அவர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும், விடுதியில் தங்கிய வாடகை பாக்கி ரூ.60 ஆயிரத்தை வாங்கி கொடுத்துவிட்டு கிளம்புங்கள் என்றும் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு சவேர்கர் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அழுதும் ஆர்ப்பாட்டம் செய்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாடகை பாக்கியை கொடுப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அதன்பிறகு பிரச்சினை தீர்ந்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story