தியேட்டர் ஒதுக்குவதில் இழுபறி தெலுங்கில் ரஜினி படத்துக்கு சிக்கல்


தியேட்டர் ஒதுக்குவதில் இழுபறி தெலுங்கில் ரஜினி படத்துக்கு சிக்கல்
x
தினத்தந்தி 8 Jan 2019 11:45 PM GMT (Updated: 8 Jan 2019 5:45 PM GMT)

ஆந்திராவில் பேட்ட படத்துக்கு போதிய தியேட்டர்கள் ஒதுக்குவதில் இழுபறி நிலவுவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (10-ந்தேதி) திரைக்கு வருகிறது. இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 தியேட்டர்களை இரு படங்களுக்கும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் ரிலீசை தள்ளி வைக்கும்படியும் தியேட்டர் அதிபர்கள் சார்பில் வற்புறுத்தப்பட்டது.

இதனால் விஸ்வாசம் சில நாட்கள் தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10-ந்தேதி படம் வெளியாகும் என்று பட நிறுவனம் உறுதிப்படுத்தி விட்டது. தற்போது இரு படங்களுக்கும் வரவேற்பு இருப்பதாகவும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதே தேதியில் ஆந்திராவில் பேட்ட படத்துக்கு போதிய தியேட்டர்கள் ஒதுக்குவதில் இழுபறி நிலவுவதாக கூறப்படுகிறது. அங்கு பேட்ட வெளியாகும் 10-ந்தேதி பாலகிருஷ்ணா நடிக்கும் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கும் வினய விதேய ராமா ஆகிய இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன. சுமார் 90 சதவீதத்துக்கு அதிகமான தியேட்டர்கள் இந்த படங்களுக்கு கிடைத்துள்ளன.

பேட்ட படத்தை வருகிற 26-ந்தேதி தெலுங்கில் வெளியிடும்படி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதில் பட நிறுவனம் உறுதியாக இருந்து விட்டது. இதனால் தெலுங்கில் குறைவான தியேட்டர்களில் பேட்ட படம் வெளியாகிறது. தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாவதால் விஸ்வாசம் படத்தை ஜனவரி 26-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Next Story