போதையில் கார் ஓட்டி விபத்து: மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி


போதையில் கார் ஓட்டி விபத்து: மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 5:43 PM GMT)

நடிகர் சக்தி போதையில் தள்ளாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்காக நடிகர் சக்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. இவர் நினைத்தாலே இனிக்கும், ஏதோ செய்தாய் என்னை, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். டெலிவிஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பிரபலமானார். சென்னை சூளைமேடு பகுதியில் காரில் சென்று விபத்து ஏற்படுத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.

தனது வீட்டில் இருந்து சொகுசு காரில் புறப்பட்ட அவர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரில் மோதி விபத்து ஏற்படுத்தினார். காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் அங்கிருந்த பொதுமக்கள் பின்னால் ஓடிச்சென்று காரை மடக்கி நிறுத்தினார்கள். விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சக்தி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சக்திபோதையில் தள்ளாடும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்காக சக்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், “நடந்த செயலுக்காக உண்மையில் நான் மிகவும் வருந்துகிறேன். மீண்டும் இதுபோன்ற செயல் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. உண்மையாகவே வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Next Story