முன் ஜாமீன் மனு தள்ளுபடி நடிகர் கொல்லம் துளசி கைதாவாரா?
சபரிமலை விவகாரத்தில் கொல்லம் துளசி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சபரிமலையில் பெண்கள் வழிபட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியதால் பல பெண்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறார்கள். ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் மறித்து போராட்டங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி கூட்டமொன்றில் பங்கேற்று பேசும்போது, “சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்தால் அவர்களை 2 துண்டாக வெட்டுவேன். அதில் ஒரு பாதியை டெல்லிக்கும் இன்னொரு பாதியை கேரள முதல்-மந்திரி அலுவலகத்துக்கும் அனுப்பி வைப்பேன்” என்றார்.
இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொல்லம் துளசியை பலரும் கண்டித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டார். கொல்லம் துளசி மீது ஜனநாயக வாலிபர் சங்கம் போலீசில் புகார் செய்தது. இதைத்தொடர்ந்து கொல்லம் கோர்ட்டில் கொல்லம் துளசி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனால் கொல்லம் துளசி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story