சமூக வலைத்தளத்தில் வைரலான நடிகர் விஷால் கைது படம்


சமூக வலைத்தளத்தில் வைரலான நடிகர் விஷால் கைது படம்
x
தினத்தந்தி 14 Jan 2019 12:37 AM GMT (Updated: 14 Jan 2019 12:37 AM GMT)

நடிகர் விஷால் சமூக, அரசியல் விஷயங்களில் ஈடுபாடு காட்டுகிறார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். அது தள்ளுபடி ஆனது. தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

சமீபத்தில் பட அதிபர் சங்க அலுவலகத்தை அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பூட்டினர். அதை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை விஷால் கைதானது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

போலீஸ் நிலையத்தில் கையில் விலங்குடன் நிற்பதுபோல் அந்த படம் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள் குழம்பினார்கள். அந்த படம் போலியா? அல்லது நிஜமாகவே கைதாகி உள்ளாரா? என்றெல்லாம் கேள்விகளையும் பதிவிட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது ‘அயோக்யா’ படப்பிடிப்பில் அந்த படம் எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஷாலை கைது செய்து கைவிலங்குடன் அழைத்து செல்வதுபோன்ற ஒரு காட்சியை படமாக்கி உள்ளனர். அந்த புகைப்படம்தான் வைரலாகி உள்ளது. இதில் கதாநாயகியாக ராஷிகண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். வெங்கட் மோகன் இயக்குகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

Next Story