‘மணிகர்னிகா’ பட விவகாரம்: கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் மிரட்டல்


‘மணிகர்னிகா’ பட விவகாரம்: கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் மிரட்டல்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:47 PM GMT (Updated: 20 Jan 2019 10:47 PM GMT)

மணிகர்னிகா பட விவகாரத்தில், நடிகை கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


ஜான்சிராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழிலும் வெளியாகிறது.

மணிகர்னிகா படத்துக்கு கர்னி சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த அமைப்புக்கு கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “4 வரலாற்று ஆசிரியர்கள் முன்னிலையில் படத்தை திரையிட்டு காட்டினோம். அதன்பிறகு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து சான்றிதழ் அளித்தனர். அதையும் மீறி கர்னி சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த போக்கை நிறுத்தாவிட்டால் கர்னி சேனா அமைப்பினரை அழிப்பேன். நானும் ராஜபுத்திர குலத்தை சேர்ந்தவள்தான்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து மராட்டிய கர்னி சேனா அமைப்பு மீண்டும் கங்கனா ரணாவத்துக்கு மிரட்டல் விடுத்து கூறியிருப்பதாவது:

“மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலேய அதிகாரியை லட்சுமிபாய் காதலிப்பதுபோல் காட்சி உள்ளது. ஒரு பாடலில் லட்சுமிபாய் நடனம் ஆடும் காட்சியும் இருக்கிறது. இது கலாசாரத்துக்கு எதிரானது. கர்னி சேனா அமைப்பினருக்கு படத்தை திரையிட்டு காட்டாமல் வெளியிட்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல.

பத்மாவத் படத்தை போல் மணிகர்னிகா படத்தையும் திரையிட அனுமதிக்க மாட்டோம். கங்கனா ரணாவத்தும் வெளியே நடமாட முடியாது” இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.


Next Story