போனிகபூர் எதிர்ப்பு: பிரியா வாரியர் படம் ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா? - டைரக்டர் விளக்கம்
போனிகபூர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரியா வாரியர் படம் ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா என டைரக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் பிரியா வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரசாந்த் மாம்பூலி இயக்குகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பிரியா வாரியர் தனது பெயரை ஸ்ரீதேவி என்று சொல்லி அறிமுகமாகிறார். சிகரெட் பிடிக்கிறார். மது அருந்துகிறார். பின்னர் குளியல் தொட்டியில் பிணமாக கிடப்பதுபோல் டிரெய்லர் முடிகிறது.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும் துபாய் ஓட்டலில் குளியல் அறையில் மர்மமாக அவர் மரணம் அடைந்த சம்பவத்தையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதற்கு இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“ஒரு நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் கங்கனா ரணாவத்தை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டோம். அவர் வேறு படங்களில் நடித்ததால் கால்ஷீட் கிடைக்காமல் பிரியா வாரியரை தேர்வு செய்தோம். ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தால் அவருக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. என்பது கதை.
பிரியா வாரியர் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீதேவி என்று பெயர் வைத்துள்ளோம். ஸ்ரீதேவி பெயரை பயன்படுத்த கூடாது என்று அவரது கணவர் போனிகபூரிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. பெயரை நான் மாற்ற மாட்டேன். படத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. படத்தை பார்த்த பிறகு ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா? என்பதை மற்றவர்கள் முடிவு செய்யட்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story