கட் அவுட்டுக்கு பால் அபிஷேகமா? சிம்பு மீது போலீசில் புகார்


கட் அவுட்டுக்கு பால் அபிஷேகமா? சிம்பு மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 23 Jan 2019 10:00 PM GMT (Updated: 23 Jan 2019 7:08 PM GMT)

நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு தனது கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம்.

நடிகர் சிம்பு சில தினங்களுக்கு முன்பு தனது கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு தனது முடிவை மாற்றி மீண்டும் இன்னொரு வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில் “எனக்கு கட் அவுட் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் அதற்கு பதிலாக அம்மாவுக்கு ஒரு புடவை, அப்பாவுக்கு ஒரு வேட்டி எடுத்து கொடுத்தீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன் என்று ரசிகர்களுக்கு சொல்லி இருந்தேன். எனக்கு 2, 3 ரசிகர்கள்தான் உள்ளனர் என்கின்றனர்.

எனவே எனக்கு ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைக்க வேண்டும். அண்டாவில் பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிம்பு மீது புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

“நடிகர் சிம்பு தனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும்படி ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதனால் பால் வீணாகும். ரசிகர்களை உசுப்பேற்றி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ள சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்க வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Next Story