பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா? நடிகை பூஜா காந்தி ஆவேசம்


பா.ஜனதா தலைவருடன் ஓட்டலில் தங்கினேன் என்பதா? நடிகை பூஜா காந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 21 March 2019 11:30 PM GMT (Updated: 21 March 2019 5:23 PM GMT)

தமிழில் கொக்கி, வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்துள்ள பூஜா காந்தி, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த பூஜா காந்தி ரூ.4.5 லட்சம் வாடகையை செலுத்தாமல் ஓடி விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பூஜா காந்தியை நேரில் அழைத்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து ரூ.2 லட்சத்தை செலுத்திய அவர் மீதி பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளார். இந்தநிலையில் பெங்களூரு ஓட்டலில் பா.ஜனதா தலைவர் அனில் மெனசினகையுடன் பூஜா காந்தி தங்கி இருந்ததாக தகவல் வெளியானது.

இதற்கு பூஜாகாந்தி மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-.

“நான் ஒரு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் பல இடங்களில் இருந்து வந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை ஓட்டலில் தங்க வைத்தேன். வாடகை கொடுக்காமல் நான் ஓடிவிட்டதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நான் பா.ஜனதா தலைவர் அனில் மெனசினகையுடன் ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறுகிறார்கள்.

நாங்கள் இருவரும் அந்த ஓட்டலில் தங்கியதை நிரூபிக்க முடியுமா? அதற்கு ஆதாரம் உள்ளதா? சில டி.வி சேனல்களில் நான் அனிலுடன் அந்த ஓட்டலில் 2 ஆண்டுகளாக தங்கி இருந்ததாக அவதூறு பரப்பி உள்ளனர். நான் ஒரு பெண். அனிலுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்து பேசுங்கள்.”

இவ்வாறு பூஜா காந்தி கூறினார்.

Next Story