தனி அதிகாரி பொறுப்பு ஏற்றார் : விஷால் கூட்டிய பொதுக்குழு ரத்தாகுமா?


தனி அதிகாரி பொறுப்பு ஏற்றார் : விஷால் கூட்டிய பொதுக்குழு ரத்தாகுமா?
x
தினத்தந்தி 30 April 2019 12:00 AM GMT (Updated: 29 April 2019 6:01 PM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சங்க அறக்கட்டளை பணத்தை அனுமதி பெறாமல் எடுத்து செலவு செய்து இருப்பதாக பதிவு துறை அலுவலகத்தில் எதிர்கோஷ்டியினர் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து சங்க தலைவர் விஷால் ஒரு மாதத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பதிவு துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று அதற்கு தனி அதிகாரியாக சேகரை நியமித்து உள்ளது. இனிமேல் சங்கத்தின் செயல்பாடுகள் தனி அதிகாரி மேற்பார்வையிலேயே நடைபெறும். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவை நாளை (1-ந் தேதி) சென்னையில் கூட்ட விஷால் ஏற்பாடு செய்து இருந்தார். இதுகுறித்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால் தனி அதிகாரி பொறுப்பு ஏற்றுள்ளதால் பொதுக்குழு கூடுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. பொதுக்குழுவை ரத்துசெய்வதா? கூட்டுவதா? என்பது குறித்து விஷால் தரப்பில் ஆலோசனை நடந்து வருகிறது.

Next Story