தமிழில் அமிதாப்பச்சன் அறிமுகமாகும் ‘உயர்ந்த மனிதன்’ படம் கைவிடப்பட்டதா?
தமிழில் அமிதாப்பச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது அமிதாப்பச்சனுக்கு முதல் தமிழ் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமிதாப்பச்சன் தோற்றத்தையும் வெளியிட்டனர். படப்பிடிப்பும் தொடங்கியது.
ஆனால் அமிதாப்பச்சனுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பை திடீரென்று நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. உயர்ந்த மனிதன் படத்துக்கு அளித்த தேதிகளில் அமிதாப்பச்சன் தற்போது வேறு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனால் உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘உயர்ந்த மனிதன் பட விவகாரத்தில் அமிதாப்பசனுக்கும் தயாரிப்பு தரப்பினருக்கும் இடையே சிறிய பிரச்சினை இருக்கிறது. அதை தீர்த்து வைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவோம். விரைவில் மும்பை சென்று அமிதாப்பச்சனை சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நானும் தமிழ்வாணனும் ஏற்கனவே சில சிக்கல்களை தீர்த்து விட்டுத்தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறோம்’’ என்றார்.
Related Tags :
Next Story