மீரா மிதுனிடம் இருந்து பறிப்பு நடிகை சனம் ஷெட்டிக்கு அழகி பட்டம்
நடிகை சனம் ஷெட்டிக்கு ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.
2016-ல் நடந்த அழகி போட்டியில் நடிகை மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றார். நடிகை சனம் ஷெட்டி 2-வது இடம் பெற்றார். இந்த நிலையில் மீரா மிதுன் தனியாக அழகி போட்டி நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் தனக்கு மிரட்டல்கள் வருவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வதாகவும் எனவே அந்த பட்டத்தை மீரா மிதுனிடம் இருந்து பறித்துக் கொள்வதாகவும் போட்டியை நடத்திய அமைப்பு அறிவித்தது. தற்போது இரண்டாவது இடம் பிடித்த சனம் ஷெட்டிக்கு ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.
இதனை போட்டி நடத்தும் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இரண்டாம் இடம் பெற்ற தனக்கு முதல் இடத்துக்கான பட்டம் 2 வருடங்களுக்கு பிறகு தேடி வந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதம் கதம், சவாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜுன் கலைவன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story