சசிகுமாரை சுற்றி வளைத்த போலீஸ்


சசிகுமாரை சுற்றி வளைத்த போலீஸ்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:15 PM GMT (Updated: 10 Jun 2019 5:38 PM GMT)

சசிகுமார் தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து இருந்தார். இந்த படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது.

சுசீந்திரன் இயக்கும் கென்னடி கிளப் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது நிர்மல் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

இதில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சமீபத்தில் மும்பை தெருக்களில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். அங்கு சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக கேமராவை மறைத்து வைத்து சண்டை காட்சியை படமாக்கினர். 

வில்லன்களை விரட்டி சென்று சசிகுமார் தாக்குவதுபோன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையாகவே சண்டை போடுகிறார்கள் என்று கருதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சசிகுமார் உள்ளிட்ட படக்குழுவினரை சுற்றி வளைத்தனர். 

பின்னர் அது படப்பிடிப்பு என்று போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு கேமரா மற்றும் சுற்றி நின்ற படப்பிடிப்பு தொழிலாளர்களை காட்டி அவர்களை நம்ப வைத்தார்கள். இந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் சசிகுமாரை அடையாளம் கண்டு திரண்டார்கள். சசிகுமாருடன் நின்று செல்பி எடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து நின்று சசிகுமார் செல்பிக்கு போஸ் கொடுத்தார்.

Next Story