பண மோசடி செய்தேனா? சோனாக்சி சின்ஹா விளக்கம்


பண மோசடி செய்தேனா? சோனாக்சி சின்ஹா விளக்கம்
x
தினத்தந்தி 14 July 2019 10:30 PM GMT (Updated: 14 July 2019 5:39 PM GMT)

பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்த ‘இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி’ விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சோனாக்சி சின்ஹா 4 தவணைகளாக ரூ.37 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் வர மறுத்துவிட்டார் என்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் குற்றம் சாட்டினர்.

சோனாக்சி வராததால் தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும், வாங்கிய பணத்தையும் அவர் திருப்பித்தர மறுத்து விட்டார் என்றும் அவர்கள் கூறினார்கள். சோனாக்சி சின்ஹா மீது உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. சோனாக்சி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தன்னை கைது செய்யாமல் இருக்க கோர்ட்டுக்கு சென்று சோனாக்சி தடை உத்தரவு பெற்றார். சோனாக்சி வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த புகாருக்கு சோனாக்சி தற்போது விளக்கம் அளித்துள்ளார். டுவிட்டரில் அவர், “பண மோசடி செய்ததாக என்மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு உள்ளது. இதனை யாரும் நம்ப வேண்டாம். என்மீது தொடர்ந்துள்ள வழக்கில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

Next Story