படப்பிடிப்பில் விபத்து நடிகர் சுதீப் படுகாயம்


படப்பிடிப்பில் விபத்து நடிகர் சுதீப் படுகாயம்
x
தினத்தந்தி 1 Aug 2019 11:19 PM GMT (Updated: 1 Aug 2019 11:19 PM GMT)

தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் தயாராகும் தபாங்-3 என்ற படத்தில் சுதீப் நடித்து வந்தார். இதில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கன்னடத்தில் தயாராகும் ‘கோட்டிகோபா-3’ என்ற புதிய படத்துக்கு சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதில் சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கினர். இதில் சுதீப் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Next Story