நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் படுகாயம்


நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Oct 2019 3:29 AM GMT (Updated: 6 Oct 2019 3:29 AM GMT)

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மோதியதில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று ஹாரிங்டன் சாலையில் வேகமுடன் சென்று கொண்டிருந்தது.  அந்த கார் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது வந்த வேகத்தில் மோதியுள்ளது.  அருகில் இருந்த கடை ஒன்றின் மீதும் கார் மோதியுள்ளது.  உணவு டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்ற அந்த வாலிபர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து உள்ளார்.

அங்கிருந்தவர்கள் ஊழியரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்தனர் என கூறப்படுகிறது.  அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்துள்ளார்.  இதனையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்தில் இருந்து சென்று விட்டார்.

தமிழில் ‘துருவங்கள் 16’ படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம், பாடம் ஆகிய படங்களிலும் நடித்துள்ள அவர், அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின.

பிக்பாஸ் சீசன்-2 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  இதனை அடுத்து கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களிலும், மகத் ஜோடியாக ஜாம்பி படத்திலும் நடித்துள்ளார்.

Next Story