இயக்குனர் சங்கத்துக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் உதவி
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ படம் கடந்த மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. விவசாயிகள் பிரச்சினையை மையமாக வைத்து தயாராகி இருந்தது. தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் படப்பிடிப்பு இறுதி நாளில் சூர்யா தங்க காசுகள் வழங்கினார். இந்த படத்தை பார்த்த விவசாய சங்கத்தினர் சூர்யாவை நேரில் பாராட்டினர்.
காப்பான் வசூல் குறித்து முரண்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு பதில் அளித்து காப்பான் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
அதில், “காப்பான் படம் நல்ல வசூலும் வரவேற்பும் பெற்றுள்ளது. கேரளாவிலும் அயல்நாடுகளிலும் அதிரிபுதிரியான வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. மொத்த வசூலில் ரூ.100 கோடியை தொட்ட படங்களின் பட்டியலில் காப்பானும் சேர்ந்துள்ளது. இது முக்கிய சாதனையாகும். தமிழக விவசாய அமைப்புகள் மற்றும் ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது இன்னொரு சாதனை” என்று குறிப்பிட்டு உள்ளது.
இது காப்பான் படக்குழுவினருக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வர இருப்பதையொட்டி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கும் இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் நல நிதிக்கும் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். காசோலையை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story