யானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லாலுக்கு சம்மன்


யானை தந்தங்கள் வழக்கு: நடிகர் மோகன்லாலுக்கு சம்மன்
x
தினத்தந்தி 25 Oct 2019 11:15 PM GMT (Updated: 25 Oct 2019 7:55 PM GMT)

கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர்.

கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யானை தந்தங்களை திருப்பி ஒப்படைக்கும்படி அரசிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார்.

வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீட்டில் வைக்க தடை உள்ளது. ஆனாலும் அப்போதைய வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் திருத்தம் செய்து யானை தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 7 வருடத்துக்கு பிறகு கொட நாடு வனத்துறையினர் பெரும்பாவூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி கேரள ஐகோர்ட்டில் மோகன்லால் மனு தாக்கல் செய்தார். அதில் தந்தங்கள் வைத்துக்கொள்ள தன்னிடம் லைசென்ஸ் உள்ளது என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையை மேலும் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

Next Story