திராவிட நாகரீகம், இந்து நாகரீகம் என்று கீழடி அகழாய்வை திரிக்க முயற்சி; டைரக்டர் பாரதிராஜா புகார்
கீழடி அகழாய்வு குறித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம், அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன.
சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும் சங்கத்தமிழ் ஆர்வலர்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.
அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story