மூன்று பாகங்களாக தயாராகிறது; 3 நூற்றாண்டுகளில் நடக்கும் கதை


மூன்று பாகங்களாக தயாராகிறது; 3 நூற்றாண்டுகளில் நடக்கும் கதை
x
தினத்தந்தி 7 Feb 2020 2:30 AM GMT (Updated: 6 Feb 2020 10:50 AM GMT)

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களை திரைக்கதையாக்கி, ‘2323’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. இதன் கதை-திரைக்கதை-வசனம்-படத்தொகுப்பு பொறுப்புகளுடன் சதீஷ் ராமகிருஷ்ணன் டைரக்டு செய்து வருகிறார்.

சதீஷ் ராமகிருஷ்ணன் , இதற்கு முன்பு, ‘தமிழனானேன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். ‘2323’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘இது, மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 வருடங்களில் நடக்கும் கதை. இதை மூன்று பாகங்களாக எடுக்கிறேன். முதல் பாகம் 2020-ல் தொடங்கும். மூன்றாம் பாகம், 2323-ல் முடியும். இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன்.

குடிநீர் பஞ்சம்தான் படத்தின் கதை. இது, வருங்காலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும். அதுவே கதையின் கரு. ‘வெதர் கண்ட்ரோல்’ எனப்படும் காலநிலையை கையில் எடுத்து அதை கட்டுப்படுத்துகிறான், வில்லன். மக்கள் வாழும் சூழ்நிலையையே கட்டுப்படுத்தும் அளவுக்கு அவன் வளர்கிறான். அவனை எப்படி கதாநாயகன் முறியடிக்கிறார்? என்பதே திரைக்கதை.

படத்தின் நாயகனாக நானே நடிக்கிறேன். நாயகிகளாக சாத்விகா, கிரிஸ்டல் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். மகேந்திர குமார் தயாரிக்கிறார். மசாலா படங்களில் சலித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும்.’’

Next Story