விஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்


விஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்
x
தினத்தந்தி 14 Feb 2020 11:15 PM GMT (Updated: 14 Feb 2020 7:27 PM GMT)

நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய நடவடிக்கையை கண்டித்தனர். விஜய்க்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் விஜய்யை அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்து தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ஒரு புறம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுபுறம் அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் நடுவில் விஜய் உருவப்படங்கள் உள்ளன.

அந்த போஸ்டரில், “ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழகத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் விஜய்யை நாங்கள் மாஸ்டராக மட்டுமே பார்க்க விரும்புகிறோம். ஆனால் அவரை ஹெட்மாஸ்டர் ஆக்கி விடாதீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் விஜய் உருவப்படத்துடன், “உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்” என்ற திருக்குறள் வாசகத்தோடு போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள். விஜய் ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சிக்கு இணையாக பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து வலுவாக வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story