ரஜினியின் நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை : விசு புகாருக்கு தனுஷ் விளக்கம்


ரஜினியின் நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை  :   விசு புகாருக்கு தனுஷ் விளக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2020 10:30 PM GMT (Updated: 26 Feb 2020 8:29 PM GMT)

நடிகர் தனுஷ் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என்று மறுத்துள்ளார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1981-ல் வெளியான படம் நெற்றிக்கண். இந்த படத்தின் கதையை இயக்குனர் விசு எழுத கே.பாலச்சந்தர் திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை ரீமேக் செய்து தனுஷ் நடிப்பதாக தகவல் பரவியது. இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார்.

நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என்று மறுத்துள்ளார்.

இதுகுறித்து விசு கூறியிருப்பதாவது:-

“நடிகர் தனுஷ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நெற்றிக்கண் படத்தை நான் ரீமேக் செய்ய இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது இல்லை. நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார்.

அதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன். அந்த படத்தின் உரிமையை நான் யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதல் கட்ட பணிகளை தொடங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். கீர்த்தி சுரேஷின் தாய் மேனகாவும் என்னை தொடர்பு கொண்டு நெற்றிக்கண் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேசை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார்”.

இவ்வாறு விசு கூறியுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story