இந்தியன்-2 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி: கிரேன் என் மீது விழுந்திருக்கக் கூடாதா? இயக்குனர் ஷங்கர் உருக்கம்


இந்தியன்-2 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி:   கிரேன் என் மீது விழுந்திருக்கக் கூடாதா?   இயக்குனர் ஷங்கர் உருக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:30 PM GMT (Updated: 28 Feb 2020 5:53 PM GMT)

கிரேன் என் மீது விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியாகி பலர் காயம் அடைந்த சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. இந்த விபத்து குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை. ஒரு மாதம் முன்பு உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் உதவிய மதுவை பிணவறையில் பார்த்து உடைந்துவிட்டேன்.

சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்டபோது துக்கம் தாளவில்லை. பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

அந்த கிரேன் என் மீது விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. விபத்தில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ரூ.1 கோடியை அளிக்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story