கமல்ஹாசன் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல் - சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடினர்


கமல்ஹாசன் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல் - சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடினர்
x
தினத்தந்தி 23 April 2020 5:31 AM GMT (Updated: 23 April 2020 5:31 AM GMT)

கமல்ஹாசன் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடலை நடிகர் சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் ஆகியோர் பாடினர்.

சென்னை,

கொரோனா விழிப்புணர்வு பாடல்களை திரையுலகினர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை சுருதிஹாசன், யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா, பாம்பே ஜெயஸ்ரீ, அனிருத், சித்தார்த், முகென், லிடியன், சித் ஸ்ரீராம், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் வீடியோ இன்று (23-ந்தேதி) வெளியாகிறது. பாடல் வரிகள் வருமாறு:-

“பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே. தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே. அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை, அடாத துயர்வரினும் விடாது வென்றிடுவோம். அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு. அதில் நீரே பெருமளவு நாம் அதிலும் சிறிதளவே.

சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. உலகிலும் பெரியது உம், அகம் வாழ் அன்புதான்.. உலகிலும் பெரியது நம், அகம் வாழ் அன்புதான்.. புதுக்கண்டம், புது நாடு என வென்றார் பல மன்னர். அவர், எந்நாளும் எய்தாததை சிலர் பண்பால், உள்ளன்பால் உடன்வாழ்ந்து, உயிர் நீத்து, அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறார்.

அழிவின்றி வாழ்வது நம் அறிவும், அன்புமே! சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு. சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு. அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே!“

இவ்வாறு கமல்ஹாசன் பாடலை எழுதி உள்ளார்.

Next Story