சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் - நடிகை பாவனா
சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் உள்ளதாக நடிகை பாவனா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை முடக்குவதும், அவர்கள் பெயர்களில் போலியாக கணக்குகளை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகைகள் குஷ்பு, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், சுவாதி உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர்.
இந்த நிலையில் நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி கணக்குகள் உருவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளனர். நான் முகநூலில் இணையவில்லை. எனவே ரசிகர்கள் எனது பெயரில் உள்ள போலி கணக்கை பின் தொடர வேண்டாம். இந்த போலி கணக்கு குறித்து புகார் அளியுங்கள்” என்றார். ரசிகர்களும் புகார் அளிப்பதாக அவருக்கு உறுதி அளித்துள்ளனர்.
பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உள்பட பல படங்களில் நடித்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 2018-ல் கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் திரிஷா நடித்து வெற்றி பெற்ற ‘96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார். தற்போது சிவராஜ்குமாருடன் பஜராங்கி-2 படத்தில் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story